வேதவிஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் வெளிவந்த இக்கட்டுரையை எனது தளத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் கௌதமன் எழுதியது.
______________________________________________________________________________________________________
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள்! இந்த நாட்டின் நலவாழ்வை அவைதான் தூக்கிப் பிடிக்கின்றன! ஊடகங்களே மக்களுக்குப் பல புதிய கண்ணோட்டங்களைக் கொடுத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன! அதிலும் தமிழ் நாட்டில் நடுநிலை, உண்மை, உறுதி என்ற அடிப்படையில் பல கருத்துக்களை விவாதம் மூலம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது சன் நியூஸ் தொலைக்காட்சி! இதில் “நேருக்கு நேர்” என்கிற விவாத நிகழ்ச்சியை ஒருவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார்! நிகழ்ச்சியில் இவர்தான் அதிகமாகப் பேசுவார்! அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச விடமாட்டார்! சிலசமயம் ஏளனமும் செய்வார்! இவரின் சித்தாந்தப் பின்னணியிலுள்ளவர்களுக்கு, குறிப்புகள் எடுத்துக் கொடுத்து அதற்குப் பதில் சொல்பவர்களைப் பாதியில் பேச விடாமல் தடுப்பார்! முடிவுரை என்ற பெயரில், அவர் கருத்துக்களை ஒரு சொற்பொழிவாக நிகழ்த்திவிட்டு, மக்கள் மன்றத்திடம் முடிவை விட்டுவிடுகிறேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்! இந்த விவாதங்களுக்கு ‘’நடுநிலை, உண்மை, உறுதி’’ என்ற சிலாகிப்புகள் வேறு! இவர் யாரென்று தெரிந்ததா?