ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 11 January 2013

தே.சி.க - இதென்ன புதுக் கழகம்!

கழகம் என்ற பெயர் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழக மக்களின் சிந்தனையை மழுங்கடித்த ஈவெரா துவக்கிய திராவிடர் கழகம். அந்த மழுங்கிய சிந்தனையில் தொடங்கி மானாட மயிலாட நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம். கணக்குக் கேட்டுப் பிரிந்து கணக்கற்ற ஓட்டுக்களில் வென்று கணக்காகப் பதின்மூன்றாண்டுகள் கருணாநிதியை நிரந்தர எதிர்க்கட்சித் தலைவராக முடக்கிவைத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.


வீரமணி சொத்துக்களை ஆட்டையைப் போட்டதால் வந்த பெரியார் திராவிடர் கழகம். டாஸ்மாக்கை வாழவைப்போர் சங்கத்தின் மானசீகத் தலைவர் விஜயகாந்த் கண்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம். அதிமுகவிலிருந்து பிரிந்து திருநாவுக்கரசு கண்ட அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றாக் கழகம். இவ்வாறாக பல்வேறு கழகங்களால் ஒரு கலகமே நடந்துவிட்ட நிலையில் புதிதாக ஒரு கழகத்தைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் இது பிற கழக மட்டைகள் ஊறிய பொய்யான திராவிடக் குட்டையில் இருந்து வெகு தொலைவில் உயிர்ப்பான தேசிய நீரோட்டத்தில் நீந்துகிறது. தேசிய சிந்தனை கழகம் (ஏனோ ‘க்’ விட்டுவிட்டார்கள்). 1976ல் துவக்கப்பட்டது இந்தக் கழகம். ஆனால் பிற கழகங்களைப் போல கலகங்கள் செய்து செய்திகளில் இடம் பிடிக்காததால் இப்படி ஒரு கழகம் இருப்பது பொது மக்களுக்குத் தெரியவில்லை.


துவக்கத்தில் புலவர் கீரன், நா.பார்த்தசாரதி போனற பெரியோர்கள் வழிகாட்டிய இந்தக் கழகம் தற்போது சுகி.சிவம், அறிவொளி உள்ளிட்ட பல  பெரியோர்களின் வழி நடத்தலில் நடை போடுகிறது. நல்லார் வழி நடப்பவை ஓசையின்றிச் செயல்படுவது இயல்புதான் என்ற போதும்

ஓசை எனப்படுவது யாதெனின் செவியின்
மடல் கிழிக்கும் ஒலி

என்ற வகையில் ஈரைப் பெத்த பெருமாள் என்று கூவும் காலகட்டம் இது. விளாம்பரத்துக்காகவே விளம்பரம் செய்யும் உலகம். நாமும் குரல் உயர்த்தவில்லை எனில் நம் இருப்பு இருட்டில் தந்தமில்லாத யானையைத் தேடிய கதையாகிவிடும்.


தேசியம் கெட்ட வார்த்தை என்று கள்வர்கள் கழகமான தி.க.வும்  அதன் அடிப்பொடிகளும் வளர்த்து வைத்த கருத்தியல் சரியத் துவங்கியிருக்கும் தற்காலத்தில் தேசிய நீரோட்டத்தில் நீந்தத் துடிக்கும் கண்மணிகள் இந்தக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பாரதத் தாயின் கரங்களை வலுப்படுத்தும் பணியைச் செவ்வனே செய்யவேண்டும்.

தற்போது சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாட சிறப்பாக வேலைகள் நடக்கின்றன.


வாழிய பாரத மணித்திரு நாடு! தாய் மண்ணே வணக்கம்!!

No comments: