பசு மாடு சிறு வயதிலிருந்து பழகிய ஜீவன். நடுவே சிலகாலம் டச் இல்லை. பள்ளிக்கூட நண்பர்களைப் போல. விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு இராஜபாளையம் செல்கையில் எங்கள் வீட்டுப் பசுவைக் கண்டு குசல விசாரிப்புகள் முடித்துத் தான் வீட்டுக்குள்ளேயே போவேன். அந்தப் பசு கன்று ஈன்ற போது அதைப் பார்ப்பது பார்வதி-பரமேஸ்வரனை நேரில் தரிசிப்பது போல என்று சொல்லக்கேட்டு ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை கொட்டிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டுக் கணக்கு வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சீம்பாலின் சுவை குறித்து யாரோ சொல்லத் தொடங்க தரிசனக் கணக்கு மறந்துவிட்டது!